கடலில் மிதந்தது மலேசிய விமானத்தின் பாகம் தானா?

464

MH370அவுஸ்திரேலிய கடல் பகுதியில், மிதந்த, உடைந்த விமானத்தின் பாகங்கள் என நம்பப்பட்ட பொருட்கள் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் திகதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி, புறப்பட்ட விமானம் மாயமானது.

வியட்நாம் எல்லை பகுதியில் சென்ற போது, தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த இந்த விமானத்தில், 239 பேர் பயணித்துள்ளனர்.

மலேசியா, இந்தியா உள்ளிட்ட, 26 நாடுகள் விமானத்தை தேடிக் கொண்டிருக்கின்றன. இந்த விமானத்தை இயக்கிய விமானி, இவ்விமானத்தை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஒருபக்கம் உள்ளது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலிருந்து, 2,500 கி.மீ., தொலைவில், உடைந்த விமானத்தின் பாகம் மிதப்பதாக, அவுஸ்திரேலிய கடற்படை விமானத்தில் பறந்த வீரர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ​நோர்வே கப்பல் உள்ளிட்ட சில நாட்டு கப்பல்களும், விமானங்களும், உடைந்த பாகத்தை தேடிக் கொண்டிருக்கின்றன. இந்த பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், பலத்த மழையும் பெய்வதால், உடைந்த விமானத்தின் பாகத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை. இது குறித்து அவுஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட் குறிப்பிடுகையில்,

“இந்திய பெருங்கடலில் மிதந்த உடைந்த பாகம், விமானத்தினுடையதா என்பதை, உறுதியாக கூற முடியாது. சரக்கு கப்பலிலிருந்து விழுந்த குப்பையாக கூட அது இருக்கலாம். தற்போது அந்த உடைந்த பாகம் காணாததால் அது கடலில் மூழ்கியிருக்கலாம்,´´ என்றார்.