மாமியாரையும், தனது 3வயது மகளையும் கொலை செய்ய கள்ளக்காதலனுக்கு உதவி செய்த பெண் கனணிப் பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிஷ்டவசமாக இந்தக் கொலை சதியில் இருந்து கணவர் உயிரோடு தப்பிவிட்டார். ஆனால், மாமியாரும் குழந்தையும் பலியாகிவிட்டனர்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பொறியியலாளர் நினோ மாத்யூவுக்கும் (40) அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் பொறியியலாளர் அனுசாந்திக்கும் (30) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
அனுசாந்திக்கு ஏற்கனவே லிஜேஷ் என்பவருடன் திருமணமாகி 3 வயதில் ஸ்வஷ்டிகா என்ற பெண் குழந்தை இருந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன், மகள் மற்றும் தனது மாமியார் ஓமனா ஆகியோர் இருப்பதாக நினைத்த அனுசாந்தி, நினோ மத்யூவின் உதவியுடன் அவர்களைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இதற்காக கடந்த புதன்கிழமை நாள் குறிக்கப்பட்டது. அனுசாந்தி வழக்கம்போல வேலைக்கு சென்ற நேரத்தில் நினோமத்யூ அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த ஓமனாவிடம் அவரது மகன் லிஜேஷின் நண்பன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு திருமணப் பத்திரிகை கொடுக்க வந்ததாக நாடகமாடியுள்ளார்.
வீ்ட்டுக்குள் அழைத்து வைத்து உபசரித்துக் கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓமனாவையும், ஸ்வஷ்டிகாவையும் அடுத்தடுத்து குத்திக்கொலை செய்துள்ளார்.
அப்போது வீட்டுக்குள் வந்த லிஜேஷையும் கத்தியால் தாக்கியுள்ளான். ஆனால் அவர் காயங்களுடன் தப்பியோடி பொலிசாருக்கு சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார்.
பொலிசார் நினோமத்யூவை கைது செய்தனர். அவனிடம் விசாரித்தபோது தான், அனுசாந்தியுடன் சேர்ந்து திட்டமிட்டு இக்கொலைகளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான். இதையடுத்து அனுசாந்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது குடும்பத்தார் அத்தனை பேரையும் கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு எப்படி தப்பியோடுவது என்பது குறித்து அனுசாந்திதான் தனது கள்ளக்காதலனுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.
இதற்காக வீட்டின் படங்களையும், ஒவ்வெரு அறையையும் செல்போனில் படம் எடுத்து அதை வட்ஸ் அப் மூலம் நினோமாத்யூவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கொள்ளையர்கள் வந்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாக சோடித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்த கள்ளக்காதலர்களின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது.
நினோமத்யூவுக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளதும், அனுசாந்தியுடனான கள்ளத்தொடர்பை தெரிந்து கொண்டு அவரது மனைவி வேறு வீட்டில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.