யாழ் யுவதியின் கொலையில் புதிய திருப்பம் : கிறிஸ்தவ மதகுரு SMS அனுப்பியது உண்மை!!

309

Jaffna

யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து கடந்த திங்கட்கிழமை(14) சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மரணத்துடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்ற பாதிரியார்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையின் பின்னரே கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பரிசோதகர் பி.எம்.ஆர்.கே.பி.ரஞ்சித் பாலசூரிய நேற்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (18) நடைபெற்றது. இதன்போது, கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் மரணத்திற்கு யாழ். ஆயர் இல்லத்தின் மறைக்கல்வி நிலைய பாதிரியார்கள் தான் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், இரு பாதிரியார்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்..

குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்ட போது, யுவதியின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் என்று யாழ். ஆயர் இல்ல மறைக்கல்வி நடுநிலைய பாதிரியார்கள் இருவரில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இரு பாதிரியார்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளோம். வாக்குமூலத்தில் மறைக்கல்வி படிப்பு சம்பந்தமாக யுவதியின் தொலைபேசிக்கு குறுந்தகவல்கள் அனுப்பியதாக பாதிரியார்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தும், இதை வைத்து இரு பாதிரியார்களையும் கைதுசெய்ய முடியாது. குறித்த யுவதியின் உடல்கூற்று பரிசோதனைக்காக மேலதிக சட்ட வைத்தியதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரினால் மேற்கொள்ளப்படும் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை (23) பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரினால் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

அந்த வகையில், சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை வரும் வரையில் பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியாது.

இதன்போது யுவதியின் பெற்றோர்களினால் யுவதியின் மரணத்திற்கு இரு பாதிரியார்கள் தான் காரணம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஏன் இரு பாதிரியார்களையும் கைதுசெய்ய முடியாது, யுவதி தற்கொலை செய்வதற்கு இரு பாதிரியார்களும் தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தற்கொலைக்கு தூண்டியவர்களை கைதுசெய்ய முடியாதா என மீண்டும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பாலசூரிய ஒருவரை கொலை செய்ததாக கண்ணால் கண்ட சாட்சியங்கள் இருந்தால், அவரை உடனடியாக கைதுசெய்ய முடியும், ஆனால், தூண்டுதல் என்ற குற்றத்திற்காக கைதுசெய்ய முடியாது. புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யுவதியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றின் உத்தரவிற்கமைய கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.