இந்தியாவில் கட்டம் கட்டமாக நடைபெற்றுவரும் வாக்களிப்பில் பாரதீய ஜனதாக் கட்சிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியே தெரிவு செய்யப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.
இந்தியாவின் 16வது தேர்தலின் பொருட்டு கடந்த 7 ம் திகதி வாக்குப்பதிவு ஆரம்பமானது. இந்த வாக்குப் பதிவுகள் எதிர்வரும் மே மாதம் 12 ம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இந்திய லோக் சபாவில் 543 உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். இந்தியாவின் 543 தேர்தல் தொகுதிகளில் இருந்தும் இவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதில் 272 ஆசனங்களை தனியாகவோ அன்றேல் கூட்டாகவோ பெறும் கட்சியே இந்திய ஜனாதிபதியால் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்.
எனினும் எந்தவொரு கட்சியும் தனித்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்புக்கள் இல்லை என்று கூறப்படுகின்றது.
அந்த வகையில் இந்தத் தடவையும் கூட்டணி கட்சி ஒன்றே ஆட்சி அமைக்கும் சாத்தியம் உள்ளது. அந்த வாய்ப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 16 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 81.5 கோடி மக்கள் இத் தடவை வாக்களிக்கவுள்ளனர். மேலும் இந்திய லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் யார் பிரதமராக ஆதரவு என்று இந்திய சஞ்சிகை ஒன்று வாரம் இருமுறை கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக தமிழகத்தில் 51 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறித்த சஞ்சிகையின் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகள், யார் பிரதமராக ஆதரவு என்பது தொடர்பாக மொத்தம் 25,247 பேரிடம் கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது.
இக்கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. யார் பிரதமர் என்ற கேள்விக்கு குறித்த சஞ்சிகையின் கருத்துக்கணிப்பு மோடிக்கே அதிக ஆதரவு என்று குறிப்பிட்டுள்ளது.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு மொத்தம் 50.68 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது 12,796 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று 25.71 சதவீதமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 6,492 பேர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்கு 21.37 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது 5,396 பேர் ராகுலை ஆதரிக்கிறார்களாம்.
யார் பிரதமராக வேண்டும் என்பதற்கு 2.24% கருத்து சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர். மொத்தம் 563 பேர் கருத்து சொல்ல விரும்பவில்லையாம்.