கையடக்க தொலைபேசி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறு ஒன்றை அடுத்து கழுத்து அறுக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் மாத்தறை மாவட்டம் தெனியாய, பெவரெலிய – நதாகல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. பெவரெலிய நதாகல தோட்டத்தை சேர்ந்த வைத்தியலிங்கம் உதயகுமார் என்ற 24 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அதே பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞர், உதயகுமாரின் அழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார்.
கொலை செய்த இளைஞரின் கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளது. இதனை இறந்த நபர் வைத்திருந்தார். அதனை தருமாறு கொலை செய்த இளைஞர் கேட்டபோது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
கொலையுண்ட நபர் மதுபான விருந்தொன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தெனியாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.