மொங்கோலியாவின் மல்யுத்தப் பயிற்றுநர்கள் இருவருக்கு ஐக்கிய உலக மல்யுத்த சங்கத்தினால் இரண்டு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான மல்யுத்த போட்டியின்போது தமது வீரர் கன்சோரிஜின் மந்தாக்நரன் என்பவருக்கு எதிராக அதிகாரிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்த காரணத்திற்காக செரென்பாட்டார் சொக்பயார், பியாம்பரின்ச்சென் பயரா ஆகிய இருவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சகலவிதமான மல்யுத்தப் போட்டிகளிலும் இவர்கள் இருவரும் 2019வரை பங்குபற்ற முடியாதவாறு ஐக்கிய உலக மல்யுத்த சங்கம் தடை விதித்துள்ளது. அத்துடன் மொங்கோலிய மல்யுத்த சங்கத்திற்கும் 50,000 சுவிஸ் ப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் உஸ்பெகிஸ்தானின் இக்தியோர் நவ்ருஸோவுக்கு எதிரான வெண்கலப் பதக்கத்தை தீர்மானிக்கும் சாதாரண மல்யுத்தப் போட்டியில் மந்தாக்நரன் 7 – 6 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
ஆனால் போட்டி முடிய 18 செக்கன்கள் இருந்தபோது மந்தாக்நரன் சண்டையிடுவதற்குப் பதிலாக வெற்றிக்கொண்டாட்டத்தில் குஷியாக இருந்தார்.
இதனை யடுத்து அவர் சண்டையிடத் தவறியதற்காக போட்டி விதிகளின் பிரகாரம் அவரது புள்ளிகள் மத்தியஸ்தர்களினால் கழிக்கப் பட்டது. இதனையடுத்து அவர் தோல்வியடைந்தார்.
இதனையடுத்து மோங்கோலிய பயிற்றுநர்கள் அரங்கில் தமது ஆடைகளைக் களைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காகவே பயிற்றுநர்கள் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.