இலங்கை மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற இரட்டை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் 137 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய மகளிர் அணி அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணியுடனான இரட்டைத் தொடர்களை 4 –0 என அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிகொண்டது.
இந்தத் தொடரானது இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு தொடராகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் வல்லவர் தொடராகவும் நடத்தப்பட்டது.
கெத்தாராம ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 268 ஓட்டங்களைக் குவித்தது.
மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீராங்கனை நிக்கலி போல்டன் (113), எலிஸ் பெரி (77) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலிய மகளிர் அணியை வலுப்படுத்தினர். அணித் தலைவி மெக் லனிங் 43 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சமரி அத்தப்பத்து 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 45.5 ஓவர்களில் 131 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.
பிரசாதினி வீரக்கொடி (33), சமரி அத்தபத்து (26) ஆகிய இருவரே ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.பந்துவீச்சில் க்றிஸ்டென் பீம்ஸ் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரெனி ஃபாரல் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹொலி ஃபேர்லிங் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.