பஞ்ச் டயலாக் பேசுவதுதான் ரொம்பவும் கஷ்டம்: விஜய் சேதுபதி!!

277

vijaysethupathi759விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள படம் ‘றெக்க’, இப்படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார். கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் வெளியிட்டார். இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் விஜய்சேதுபதி பேசும் போது, போன வெள்ளிக்கிழமை ‘ஆண்டவன் கட்டளை’ வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாடல்கள் வெளியீட்டுவிழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. படங்கள் வரிசையாக வருவதற்கு காரணம் நேரம் அப்படி அமைந்ததுதானே தவிர இவ்வளவு வேகமாக படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் அப்படி தொடர்ச்சியாக அமைந்து இருக்கிறது.

ஆனாலும் ரசித்து வரவேற்ற ரசிகர்களுக்கும் ஊக்கம் தந்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி. முதலில் ‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன், முடியுமா என தயங்கினேன். இதில் நடிக்க முடியுமா என்று எனக்குள் 1008 கேள்விகள் எழுந்தன. ஆனால் சிவா கதை சொன்ன விதம், வசனம் பேசிக்காட்டிய முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.

இந்தக் கதைமேல் நம்பிக்கை வைத்து, என் மேல் நம்பிக்கை வைத்து தயாரிக்க முன்வந்த கணேஷுக்கு நன்றி. படத்தில் எதற்கும் கஷ்டப்படவில்லை. ஆனால் ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதற்குத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்படத்தில் பஞ்சுக்கே ஒரு பஞ்ச் இருந்தது. இயக்குநர் சிவா ஒரு நடிகனை புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்திருந்தார். அவர் மேலும் உயர்வார்.

லட்சுமி மேனனுக்கும் நல்ல பாத்திரம். சதீஷ் கலகலப்பாக வருகிறார். கே.எஸ்.ரவிகுமார் சாரின் விசிறி நான். ‘தங்கமகன்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் அவர் நடித்திருப்பது படத்துக்கு பலமாகி அழகாக மாறியிருக்கிறது என்று பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, துணைத்தலைவர் கதிரேசன், இயக்குநர்கள் மகிழ்திருமேனி, பன்னீர் செல்வம், படத்தின் இயக்குநர் ரத்தின சிவா, இசையமைப்பாளர் டி.இமான், கவிஞர் யுகபாரதி, நடிகை லட்சுமி மேனன், நடிகர்கள் சதீஷ், ஹரீஷ், எடிட்டர் கே.எல்.பிரவீன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.