பித்ருலோகம் அதாவது முன்னோர்களின் உலகம் என்பது நமது பூமிக்கு தென் திசையில் உள்ளது என்ற நம்பிக்கை நமது இந்து மதத்தில் உண்டு. இந்த காரணத்தால் முன்னோர்களின் படங்களை தென்திசை நோக்கி மாட்டி வைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இறந்தவர்களின் படங்களை வீட்டில் மாட்டி வைப்பதே தவறு என்றும் வாதிடுவார்கள்.
வரலாற்று உண்மைகளை வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அரண்மனைகளில் அரசர்களின் உருவத்தினை வரைந்து வைத்தார்கள். காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியில் தற்காலத்தில் போட்டோக்களில் முன்னோர்களின் உருவத்தினை காண்கிறோம்.
இந்த படங்களை வீட்டில் அவர்கள் நினைவாக வைத்திருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதேபோல அவர்கள் படங்களை தென்திசை நோக்கிதான் மாட்டி வைக்க வேண்டும் என்பதில்லை. எந்த திசை நோக்கி வேண்டுமானாலும் மாட்டலாம். முன்னோர்களின் படங்களை பூஜையறையில் வைப்பது மட்டும் கூடாது. பூஜையறை தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் எந்த திசை நோக்கியும் மாட்டி வைக்கலாம். இதில் எந்தத் தவறும் இல்லை.