வவுனியா தரணிக்குளத்தில் நேற்று (19.10.2016) மதியம் 2.20 மணியளவில் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா தரணிக்குளத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்விபயிலும் தரம் 12 மாணவக் குழுக்களுக்கும் அதே பாடசாலையில் கல்விபயிலும் தரம் 9 மாணவனுக்குமிடையில் நேற்று (19.10.2016) பாடசாலை முடிவடைந்த பின்னர் சிறிய சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இச் சலசலப்பு மோதலாக மாறி அருகே காணப்பட்ட குளிர்பான போத்தலால் தாக்கப்பட்டு பாடசாலை மாணவர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டு (பாடசாலை சீருடையுடன்) வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளர். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் தொடர்பு கொண்ட போது,
பாடசாலை மாணவர்கள் மதுபோதையில் அந்த மாணவனை தாக்கியுள்ளதாகவும் எனவே அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் மருத்துவ அறிக்கையுடன் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
வவுனியா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் மாணவர்களின் பெற்றோர் ஒன்று கூடியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார்.