ஜெயலலிதாவைப் பார்க்க பிரதான வாயிலை தாண்டிய மர்ம நபர் : அப்பலோவில் பதற்றம்!!

235

j1

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனைக்குள் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி நுழைந்த மர்மநபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 28 நாட்களாக அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், அப்போலோ மருத்துவமனை பொலிஸாரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக ஜெயலலிதா சிகிச்சை பெறும் இரண்டாவது தளத்தில் யாரும் அனுமதியின்றி செல்ல முடியாது. நீண்ட விசாரணைக்குப்பிறகே சிகிச்சைக்குரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் நோயாளிகளும், பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அப்போலோ மருத்துவமனைக்கு வெளியில் அ.தி.மு.க தொண்டர்கள் தவமாய் காத்திருக்கின்றனர். மேலும், பத்திரிகையாளர்களும் அங்கு குவிந்துள்ளனர். ஜெயலலிதாவை சந்திக்க அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்போலோ மருத்துவமனை வளாகம் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாகி விட்டது.

இந்தநிலையில் இன்று பிற்பகல், அப்போலோ நுழைவு வாயிலில் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி, 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிரதான வாயிலை தாண்டி வேகமாக மருத்துவமனைக்குள் நுழைய முயன்றார். அந்த நபரின் நடவடிக்கையில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரைப் பிடித்து பொலிஸார் விசாரித்தனர். அப்போது, அவர் தன்னுடைய பெயர் உமேஸ்ரெட்டி என்று தெரிவித்தார். அப்போலோவில் சிகிச்சை பெற செல்வதாக தெரிவித்தார். ஆனால் அவரது கையில் அ.தி.மு.க துண்டு இருந்ததால் பொலிஸாருக்கு உமேஸ்ரெட்டி மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அழைத்துச் சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது உமேஸ்ரெட்டி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாறி, மாறி பேசினார். இது பொலிஸாருக்கு உமேஸ்ரெட்டி மீதுள்ள சந்தேகம் அதிகரித்தது. இதனால் அவரிடம் தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “உமேஸ்ரெட்டி, சிகிச்சை பெற செல்வதாக பாதுகாப்பில் நின்ற பொலிஸாரிடம் கூறி விட்டு உள்ளே நுழைந்துள்ளார். அவரது கையில் அ.தி.மு.க துண்டு இருந்ததைப் பார்த்தவுடன் அவரிடம் விசாரித்தோம். முதற்கட்ட விசாரணையில் அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. முழு விசாரணைக்குப்பிறகே அவர் எதற்காக அப்போலோவுக்கு சென்றார் என்ற விவரம் தெரியவரும்” என்றார்.

அப்போலோவுக்குள் சர்வசாதாரணமாக நுழைந்த உமேஸ்ரெட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர், ஜெயலலிதாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளே சென்றாரா என்ற கோணத்திலும் விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அங்கு அதிகரிக்கப்பட்டதுடன், போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கவனக்குறைவாக செயல்பட்ட பொலிஸாரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

j2