தன்னை 4 ஆண்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர் என பொய்யாக முறைப்பாடு செய்த யுவதி ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 25 வயதான லெய்ஹா ஆர்ட்மென் எனும் யுவதிக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு அருகில் முகவரியொன்றை தேடி வந்த இனந்தெரியாத கறுப்பின ஆண்கள் நால்வர் தன்னை கார் ஒன்றில் கடத்திச் சென்றதாகவும் பின்னர் தன்னைக் கட்டிவைத்துவிட்டு, அவர்கள் நால்வரும் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் தன்னை தாக்கியதாகவும் இவர் கூறினார்.
இரத்தம் தோய்ந்த நிலையில் தான் கட்டிவைக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படமொன்றையும் இவர் தனது காதலருக்கு அனுப்பிவைத்தார்.
தன்னை விடுவிப்பதற்காக கடத்தல் குழுவினர் கோரும் கப்பத்தொகையை அவர்களிடம் கொடுக்குமாறும் தனது காதலரிடம் லெய்ஹா ஆர்ட்மென் கோரினார்.
இறுதியில், கடத்தல் குழுவினர் தன்னை வாகனத்தில் ஏற்றி வந்து வீட்டுக்கு அருகில் கைவிட்டுச் சென்றதாகவும் அதன்பின் வைத்தியசாலைக்கு தான் சென்றதாகவும் அவர் கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக மிச்சிகன் மாநிலத்திலுள்ள முஸ்கேகன் கவுன்ரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தினர். எனினும், இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. தான் பொய் கூறியதாக லெய்ஹா ஆர்ட்மென் ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து பொய்யான முறைப்பாடு செய்ததாக குற்றம் சுமத்தி லெய்ஹாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லெய்ஹா ஆர்ட்மெனுக்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்ததுடன் 1,158 டொலர் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன், லெய்ஹா இரு வருட காலம் நன்னடத்தை கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.