ஓஃப்லைனில் இருந்தாலும் உங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது பேஸ்புக்!!

340


பேஸ்புக் சமூக வலைத்தளமானது தனது பாவனையாளரின் ஒன்லைன் (Online) நடவடிக்கைகள் மட்டும் அல்லாது, ஓஃப்லைன் (Offline) நடவடிக்கைகளையும் கண்காணித்து, சில நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து தகவல் சேகரிப்பதாக ‘ப்ரோ பப்ளிகா’ எனும் செய்தித்தாளில் அதிர்ச்சித் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.



பேஸ்புக்கில் நீங்கள் நேரம் செலவழிக்கும் பொழுது அது உங்களது ‘ஒன்லைன்’ நடவடிக்கைகள் மூலம் உங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது என்பது நீங்கள் அறிந்த செய்தி. ஆனால், ‘ஓ ஃப்லைனில்’ இருக்கும் போதும் கூட அது உங்களைப் பற்றிய தகவல்களை வேறு சில நிறுவனங்கள் மூலம் சேகரிக்கிறது.

பேஸ்புக் தனது அல்காரிதங்கள் மூலம் பயனாளர்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை சேகரிக்கிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் அடிப்படையில், பயனாளர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். அவர்களைப்பற்றிய விபரங்கள் பேஸ்புக்குடன் தொடர்பில் உள்ள பல்வேறு விளம்பரதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன.



இவ்வாறு கொடுக்கப்படும் தகவல்கள் மூலமாக அவர்கள் நமக்கு விளம்பரங்களை காண்பிக்கச் செய்கின்றனர். இந்நிலையில், தற்பொழுது மேலும் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டும் நோக்கில், பயனாளர்களின் சம்பளம் எவ்வளவு, எந்த கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள், எத்தனை கிரெடிட் கார்ட்கள் வைத்திருக்கிறார்கள் என்ற விபரங்கள் வரை வெளியிலிருக்கும் சில ‘வணிக ரீதியில் தகவல் விற்கும்’ நிறுவனங்கள் மூலம், பணம் கொடுத்து தகவல்கள் திரட்டப்படுவதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.



பயனாளர்களின் வசதிக்காக சிறிய அளவில் மட்டும் தகவல்கள் திரட்டப்படுவதாக தனது தளத்தில் பேஸ்புக் தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வளவு அதிகமான தகவல்கள் அதுவும் ஓஃப்லைன் மூலமாக திரட்டப்படுவதைப் பற்றி பேஸ்புக் எதுவும் தெரிவிப்பதில்லை என்பது தவறானது என துறைசார் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.