19 வயதான இளைஞன் ஒருவனை சூட்கேஸ் ஒன்றுக்குள் ஒளித்து வைத்து, வட ஆபிரிக்காவில் ஸ்பானிய ஆளுகைக்குட்பட்ட பிராந்தியத்துக்குள் கடத்திச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவரை ஸ்பானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்க கண்டத்தின் வட பகுதியில், மொரோக்கோவுக்கு அருகில் செவ்ட்டா எனும் நகரம் உள்ளது. 18.5 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட இந் நகரம் ஸ்பானிய ஆட்சிக்குட்பட்டதாகும்.
இதனால், மொரோக்கோவிலிருந்து செவ்ட்டாவுக்குள் நுழைவதற்கு பலர் முயற்சிக்கின்றனர். இதைத் தடுப்பதற்காக செவ்ட்டாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையில் அதிக உயரமான வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வேலிகளுக்கு மேலாக ஏறி செயுட்டாவுக்குள் நுழைபவர்களை தடுப்பதற்கு ஸ்பானிய பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். புத்தாண்டுத் தினமான கடந்த ஞாயிறன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 1100 பேர் இவ்வாறு மொரோக்கோவிலிருந்து செவ்ட்டாவுக்குள் நுழைய முயன்றபொது ஸ்பானிய படையினர் அவர்களை கலைக்க முற்பட்டனர்.
இதன்போது, குடியேற்றவாசிகள் கற்களை எறிந்ததால் சுமார் 50 படையினர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்துக்கு முன்னதாக, சட்டரீதியாக செவ்ட்டா பிராந்தியத்துக்குள் சென்ற மொரோக்கோ பெண் ஒருவர், சூட்கேஸ் ஒன்றுக்குள் 19 வயதான இளைஞனை ஒளித்து வைத்து கடத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞன் ஆபிரிக்க நாடான கெபோனைச் சேர்ந்தவன் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மொரோக்கோ பெண்ணை ஸ்பானிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.