செல்வம் கொழிக்க வைக்கும் மூன்று வழிகள்!!

425


பொருள் இல்லாதவனை சுற்றம், குடும்பம் என யாரும் வேண்டார் என்பது பாரதி பாடல்.அதற்கமைய செல்வம் ஒரு திறமை என்றால் அதை தக்க வைப்பதும் ஒரு திறமை தான். ஆனால் அதற்கு பலருக்கு வழிவகைகள் தெரியாது.பொதுவாகவே செல்வம் மூன்று வகைகளைக் கொண்டது என கூறப்படுகின்றது. லட்சுமி செல்வம், குபேர செல்வம், இந்திர செல்வம் என அவை அழைக்கப்படும்.

லட்சுமி செல்வம்

பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள் என்பது ஐதீகம்.

இந்த மகாலட்சுமி தான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கியதும்,. கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்ததும் லட்சுமி தான்.

ஏழு தலைமுறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும்.

இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழாதா என ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல இருந்தாலும், இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும் என்பது ஐதீகம்.

குபேர செல்வம்

குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட, குபேரன் தன் செல்வத்தை இழந்தான். மன அமைதி வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான்.

சிவபெருமான் அன்னை பார்வதி தேவியுடன் அவனுக்கு காட்சி அளித்தார். தேவியின் பேரழகில் மதி மயங்கி அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அகிலாண்ட நாயகியின் பேரொளியால் அவனது இடது கண் வெடித்து தெறித்தது. குபேரன் மனம் வருந்தி பார்வதி தேவியிடமும், சிவபெருமானிடமும் மன்னிப்பு கேட்டான். அறியாமல் செய்த பிழைக்காக சிவனும், பார்வதியும் குபேரனை மன்னித்தார்கள்.

மகாவிஷ்ணுவின் மனைவி யான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள். தனம், தானியம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.

இதன்படி, குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.

இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.

இந்திர செல்வம்

போகி என்ற பண்டிகையை இந்திரனை முன் வைத்தே கொண்டாடுகிறோம். தேவர்களின் தலைவரும், கிழக்கு திக்கின் அதிபதியாகத் திகழும் இந்திரனுக்கு பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன் பொருள் சேர்க்கை போன்றவை அடையாளங்கள் ஆகும்.

இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது.

இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்.