குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்ற மாணவி திடீர் மரணம்!!

315

தூத்துக்குடியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான குத்து சண்டை விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவி திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்திய திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் தெரிவு போட்டிகள் நடைபெற்றன.

இதில் தூத்துக்குடி சோரீஸ்புரம் பள்ளி 9ம் வகுப்பு மாணவி மாரீஸ்வரி குத்துசண்டை போட்டியில் சக போட்டியாளருடன் மோதிய போது திடீரென மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார்.

உடனே மாரீஸ்வரியை மைதானத்தில் அமர வைத்து முதலுதவி அளித்து, தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மாரீஸ்வரியை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு சிகிக்சை பலனின்றி மாணவி மாரீஸ்வரி மரணமடைந்தார்.

மாணவி மாரீஸ்வரியின் மரணம் குறித்து தூத்துக்குடி உதவி ஆட்சியர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.