அண்மையில் வெளியாகிய க.பொ.த.( உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவன் மணிவேல் தர்மசீலன் உயிர்முறைகள் தொழிநுட்பப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று வடமாகாணம் மற்றும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு மட்டுமல்லாது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.தர்மரட்ணம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
உயிர்முறைகள் தொழிநுட்பப் பிரிவில் மணிவேல் தர்மசீலன் 3A சித்திகளைப் பெற்று மாவட்டநிலை ரீதியில் முதலாம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தினையும், நவரட்ணராசா கிருசாயினி B2C சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் எட்டாம் இடத்தினையும் கணிதப்பிரிவில் மனோகரன் அருன்ராஜ் ABC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 14வது இடத்தினையும் கனேஸ் உசாந்தன் C2S சித்திகளையும், வர்த்தகப்பிரிவில் முருகதாஸ் மோகன்ராஜ் A2B சித்திகளையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
கணிதப்பிரிவில் மாணவர் ஒருவர் எமது பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியது இதுவே முதற்தடவையாகும். எமது பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட கஸ்ரங்களுக்கு மத்தியிலேயே இங்கு வந்து கற்பதுடன் ஆசிரியர்களும் போக்குவரத்து தொடர்பில் பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ள நிலையிலேயே அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.
வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் இவ்வாண்டு பரீட்சை எழுதியோரில் 4 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்றுள்னர் எனவும் அவர் தெரிவித்தார்.