ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக செயற்படுத்தபப்ட்டு வந்த ‘ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” (ஜனபதிட கியன்ன) என்ற இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலிருந்து தகவல்களை பெற்று அதனை ஊடகவியலாளரொருவருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபரிடமிருந்த கணினி துணைச்சாதனங்கள், தகவல்கள் என்பவற்றையும் இரகசிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அஹங்கம, கதலுவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு குறித்த இணையத்தளத்தினுள் பிரவேசித்துள்ளார். இந்த இணையத்தளம் மக்களின் நேரடி முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுமக்களினால் அனுப்பப்படும் பிரேரணைகள், மனுக்கள், தனிப்பட்ட குரல்பதிவுகள் மற்றும் கடிதங்கள் போன்ற இலட்சக்கணக்கான தகவல் கோப்புகள் குறித்த இணையத்தளத்திலிருந்து சந்தேக நபரினால் திருடப்பட்டுள்ளது.
இச்சந்தேகநபரினால் களவாடப்பட்ட இந்த கோப்புகள் ஊடகவியலாளரொருவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்கள் காணமல்போயுள்ளமை குறித்து ஜனாதிபதி செயலகம் கடந்த 7ஆம் திகதி இரகசிய பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் இந்த தகவல்கள் தனிப்பட்ட நபரொருவரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அம்மின்னஞ்சல் முகவரிக்கு குறித்த தகவல்களை அனுப்பியிருந்த மின்னஞ்சல் முகவரியை இனங்கண்டுள்ளனர்.
இந்த மின்னஞ்சல் முகவரிக்குரிய அஹங்கம, கதலுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரான இளைஞரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது அவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் லால்பண்டார உத்தரவிட்டார்.
ஜனாதிபதியின் உதவிச்செயலாளர் சமீர கன்னங்கர பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய இரகசிய பொலிஸ் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.கே.சேனாரத்ன இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பில் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தான் எவ்வித சிரமமுமின்றி குறித்த இணையத்தளத்தினுள் ஊடுருவியதாகவும், அந்த இணையத்தளத்தினுள் காணப்படும் பொதுமக்களின் மனுக்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்காமை குறித்து தெரியப்படுத்தவே தான் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட தகவல்கள் இலத்திரனியல் ஊடக நிறுவனமொன்றில் பணிபுரியும் ஒருவரது உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை, அண்மையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி, உயர்தரப்பரீட்சையினை ஒத்திவைக்குமாறு அதிலுள்ள தரவுகளை மாற்றி மிரட்டல் விடுத்திருந்த பாடசாலை மாணவரொருவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட மாணவனுக்கு அதன்பின்னர் ஜனாதிபதி ஐபோன் ஒன்றினையும் பெறுமதியான பரிசுகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.