வவுனியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பொருத்து வீடுகள்!!

634

வவுனியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை வழங்குவதற்கு கிராமசேவையாளர்களூடாக விண்ணப்பப்படிவம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனரமைப்பு புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சினால் இவ்விண்ணப்பப்படிவங்களின் விநியோகம் அரசாங்க அதிபரின் சிபாரிசுக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது.

கிராமசேவையாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர், கிராமசேவையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர்களினால் பொருத்தவீடு தொடர்பாக விளக்கம் கிராமசேவையாளர்களுக்கு அளிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் வீடுகளில் செட்டிகுளம் பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம், வவுனியா தெற்கு, வவுனியா நகரம் போன்ற பகுதிகளிலுள்ள பொருத்து வீடு தேவையுடையவர்களுக்கு பொருத்துவீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.