வவுனியாவில் சி.ஐ.டி வேடத்தில் வீட்டிற்குள் நுழைந்து கைவரிசையைக் காட்டிய திருடன்!!

528

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சி.ஐ.டி என தம்மை தெரியப்படுத்தி சென்ற இருவர் வீட்டை சோதனை செய்வதாக கூறி 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

நேற்று இரவு 7.30 மணியளவில் செட்டிகுளம், முகத்தான்குளம், பாம்- 2 பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற இருவர் தாம் சி.ஐ.டி எனவும் உங்களது வீட்டில் கசிப்பு மற்றும் டைனமேற் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். அப்போது அவர்கள் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள் சோதனையிட அனுமதித்த போது வீட்டில் இருந்த 5 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.