சமந்தா – நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!!

461

பாணா காத்தாடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சமந்தா. நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24 ஆகியவை சமந்தா நடித்த முக்கிய படங்கள்.

தெலுங்கில் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுடன், சமந்தா ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இந்தநிலையில் 2 மாதங்களுக்கு முன்பு இந்த காதலை சமந்தா உறுதிபடுத்தினார்.

நாக சைதன்யாவும், நானும் காதலிப்பது உண்மை தான். எங்கள் காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளோம். திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடிப்பேன். கணவர் குடும்பத்தினருக்கு அவமதிப்பு ஏற்படாத வகையில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பேன், என்று சமந்தா தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சமந்தா-நாக சைதன்யா திருமண ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டனர். நாக சைதன்யாவின் தம்பியும், தெலுங்கு நடிகருமான அகிலுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ஷ்ரேயா பூபாலுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனவே அடுத்து சமந்தா-நாக சைதன்யா நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக இந்த திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண திகதியை ஓரிரு நாட்களில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.