தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறை வளாகம் பரபரப்பு மிகுந்து காட்சியளிக்கிறது.
இந்நிலையில், சிறை வளாகத்திற்கு காரில் வந்து இறங்கினார் ஒரு பெண். தங்க நிற போடர் வைத்த கறுப்பு நிற சீலை. கழுத்து நிறைய நகைகள் என தோற்றத்தோடு வந்தார்.
சிறைவளாகத்துக்குள் சென்ற அந்த பெண், துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு நின்ற பெண்ணிடம், சிறை கதவை திற, எங்க அம்மாவை பார்க்க வேண்டும் என கேட்டார். சசிகலாவை சொல்கிறாரோ என நினைத்து அவரிடம் பொலிசார் யாரைப்பார்க்க வேண்டும் என மீண்டும் கேட்டனர்.
ஜெயலலிதா அம்மாவைத்தான் பாக்கணும். அவங்க உள்ளே தானே இருக்காங்க. அவுங்கள நான் பாக்கணும் என கூறியுள்ளார். அதிர்ந்து போன பொலிசார் ஜெயலலிதா இல்லை அவர் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு ஆவேசமடைந்த அந்த பெண் என் தெய்வத்தை இந்த ஜெயில்ல போட்டு கொன்னுட்டீங்களே. பாவிகளா, என் தெய்வம் இறந்ததை ஏன் சொல்லவில்லை என கதறி அழ சிறை வளாகம் பரபரத்துள்ளது.
இதையடுத்து பொலிசார் விசாரித்த போது, அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர், பெயர் சந்திரம்மாள் என்பதும், மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த அவர் , பெங்களூருவில் தங்கி இருக்கிறார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் சிறை வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.