தந்தையைக் கொன்ற தனயன் : தாய்க்கு எமனான மகள் : ஒரே குடும்பத்தில் பரிதாபம்!!

262

மது வாங்கப் பணம் கொடுக்க மறுத்த தாயை, போதைக்கு அடிமையான மகள் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹைதராபாத்தின் இப்பத்தூரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நர்சம்மா. இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், போதைக்கு அடிமையான நர்சம்மாவின் மூத்த மகன், மது வாங்கப் பணம் தராத கோபத்தில் தந்தையை அடித்துக் கொன்றார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

இதன்பின், நர்சம்மா தனது இளைய மகள் பர்வதம்மாவுடன் வசித்து வந்தார். பர்வதம்மாவுக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்றபோதும், அதீத மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்ததால் கணவரைக் கைவிட்டு தாயுடன் வாழ்ந்து வந்தார். நர்சம்மாவுக்குக் கிடைத்த ஓய்வூதியத்திலேயே இருவரது சீவனமும் நடந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் மது வாங்கப் பணம் தருமாறு நர்சம்மாவை பர்வதம்மா வற்புறுத்தியிருக்கிறார். இனிமேல் மதுவுக்குப் பணம் தரப் போவதில்லை என்று நர்சம்மா உறுதியாகக் கூறிவிட்டார். மது போதையில் இருந்த பர்வதம்மா கோபம் தலைக்கேறிய நிலையில், வீட்டில் இருந்த கட்டையைத் தூக்கி தாயின் தலையில் ஓங்கி அடித்தார். இத்தாக்குதலால் அதிகளவு இரத்தம் வெளியேறி நர்சம்மா உயிரிழந்தார்.

உயிரிழந்த தன் தாயின் உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தார் பர்வதம்மா. பாதி மட்டுமே எரிந்துபோன தாயின் உடலை அப்புறப்படுத்த தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தார். அயலவர்கள் நர்சம்மா பற்றி விசாரித்தபோது, இளைய சகோதரன் வீட்டுக்குச் சென்றிருப்பதாகக் கூறிவிட்டார் பர்வதம்மா.

சுமார் ஒரு வாரம் கழிந்த நிலையில், நேற்று நர்சம்மாவின் பாதி கருகிய உடலை பர்வதம்மா வீட்டின் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு இழுத்துச் செல்வதைக் கண்ட அயலவர்கள் பொலிஸுக்குத் தகவல் அளித்தனர். அதன் பேரில் வந்த பொலிஸாரிடம் நடந்ததை ஒப்புக்கொண்டார் பர்வதம்மா.

இதையடுத்து பர்வதம்மாவைக் கைது செய்த பொலிஸார், அவர் மீது வழக்குப் பதிவுசெய்து விளக்கமறியலில் அடைத்தனர்.