எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கியஸ்தர்கள் சிலர் கைது!!

284

சட்டப்பேரவையில் திமுகவினர் தாக்கப்பட்டதாகக் கூறி மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், பெருந்திரளான திமுக தொண்டர்கள் அப்பகுதியில் கூடி பொலிஸ் வாகனங்களைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர். மெரினா கடற்கரைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளைக் கண்டித்து, திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற பிரமுகர்கள் முதலில் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்துவிட்டு, பிறகு மெரினா கடற்கரைக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தி சிலை அருகே அவர்கள் குழுமிய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பெருந்திரளான திமுக தொண்டர்களும் கூடியதால் கடற்கரை வீதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டதுடன், பொலிஸார் கலைந்து செல்லுமாறு கோரினர். திமுக வினர் கலைந்து செல்ல மறுப்புத் தெரிவித்ததால், அவர்களைக் கைது செய்து வேன்களில் ஏற்றினர்.

எவ்வாறாயினும், பொலிஸ் வாகனங்கள் நகர முடியாதவாறு தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.