அதிகரித்து வரும் காரணமற்ற காதுகேளாமை!!

361


உலகளவில் 360 மில்லியன் மக்கள் காரணமற்ற காதுகேளாமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் 5 சதவீதமாகும். இவர்களில் இலங்கை, இந்தியா, ஆபிரிக்கா போன்ற வளரும் நாடுகளில் உள்ளவர்கள் தான் பெரும்பான்மையாகப் பாதிக்கப்படுகிறார்களாம். இதற்கு முக்கியமாக அதிகரித்து வரும் ஒலி மாசும் ஒரு காரணம் என்கிறார்கள்.



தெற்காசியாவை பொறுத்து வரை பிறக்கும் 1000 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு காது கேளாமை பாதிப்பு இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். இதற்கு பெற்றோர்களும், கர்ப்பிணிப் பெண்களும் செவித்திறன் குறித்த விழிப்புணர்வை பெறாததே காரணம். அதே சமயத்தில் காது கேளாமைக்குரிய சிகிச்சையைப் பெற்றால் 50 சதவீதமானவர்கள் இந்த பாதிப்பில் இருந்து குணமடைகிறார்கள். பேறு காலத்தின் போது கவனமுடன் செயல்பட்டால் பிறவியிலேயே செவித்திறன் பாதிப்புடன் குழந்தை பிறப்பதை தடுத்துவிட முடியும் என்கிறார்கள்.

அதே போல் பெரியவர்களும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்களின் செவியுணர்வு குறைந்து வருவதை முதலில் பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்.



சொன்னதை திரும்பச் சொல்லும்படி மற்றவர்களிடம் அடிக்கடி கேட்பது, உங்களுடன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அடிக்கடி புருவத்தைச் சுருக்கி, தலையை முன்னேச் சாய்த்து, அவர் பக்கம் சாய்ந்து நின்று கேட்பது, பொது கூட்டம், மால்கள், ஏராளமானவர்கள்கூடியிருக்கும் இடம் ஆகியவற்றில் இரைச்சல் அதிகமாக இருப்பது போல் உணர்வது அல்லது மற்றவர்களின் பேச்சை கேட்க சிரமப்படுவது போன்றவற்றின் மூலம் உங்களின் செவித்திறன் குறைந்து வருகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். மிக்ஸி 90 டெசிபல் ஒலியை எழுப்பக்கூடியது. இதனை தொடர்ந்து இரண்டு மணித்தியாலம் வரைக் கேட்டால் உங்களின் கேட்கும் திறன் பாதிக்கப்படும். இது ஒரு உதாரணம் தான்.



அதனால் அதிக ஒலி உள்ள இடங்களில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. அத்துடன் உங்களின் சுற்றுப்புறத்தில் ஒலியின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். இரைச்சலை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணி பெண்கள் சில மருந்துகளை பேறு காலத்தின் போது தவிர்க்கவேண்டும். இதனால் வயிற்றில் இருக்கும் சிசு காது கேளாமை பாதிப்பிற்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். காதுகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் தவறாமல் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.