தாய்லாந்தில் 915 நாணயங்களை விழுங்கிய கடலாமையொன்று, சத்திரசிகிச்சையின் பின்னர் உயரிழந்துள்ளது. 25 வயதான இந்த கடலாமை, தாய்லாந்தின் சோன்பூரி மாகாணத்திலுள்ள பூங்காவொன்றின் தடாகத்தில் சுமார் 20 வருடங்களாக வசித்து வந்தது.
அத் தடாகத்தில் நாணயங்களை வீசுவது தமக்கு அதிஷ்டத்தை ஏற்படுத்தும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இவ்வாறு வீசப்படும் நாணயங்களை மேற்படி ஆமை விழுங்கி வந்ததால் அதற்குப் பாதிப்பு ஏற்பட்டது.
தாய்லாந்தின் சூலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிருக வைத்தியர்களால் இம் மாத முற்பகுதியில் மேற்படி ஆமை சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டு, அதன் வயிற்றிலிருந்து 915 நாணயங்கள் அகற்றப்பட்டன. சத்திரசிகிச்சைக்குள்ளான இந்த ஆமை சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் கடந்த ஞாயிறன்று இரவு அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
திங்கட்கிழமை அதற்கு அவசர சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. எனினும் அதையடுத்து, கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட ஆமை கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிவித்துள்ளனர். இரத்தம் நஞ்சாகியமையே இது உயிரிழ ந்தமைக்கு காரணம் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.