2019 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு வந்த சிக்கல்!!

310


வங்கதேச அணியுடன் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால், 2019 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கிண்ணம் போட்டிக்கு தகுதி பெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.



இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி, அங்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையே நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒரு கத்துக்குட்டி அணியிடம் இலங்கை அணி தோற்றது இலங்கை ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில், வங்கதேச அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோற்றதால், ரசிகர்கள் சிலர் 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் தொடருக்கும் இலங்கை அணி தகுதி பெறுமா என்ற பயத்தில் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.



மேலும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெறும். மீதம் உள்ள அணிகளுக்கு தகுதி போட்டிகள் நடத்தப்படும்.


அந்த வகையில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகளுக்கான வாய்ப்பு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி 2017 வரை மட்டுமே என்று தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை அணி 6 வது இடத்திலும், வங்கதேச அணி 7 வது இடத்திலும் உள்ளது.

இத்தொடரை வங்கதேச அணி வெயிட்வாஷ் செய்தாலோ அல்லது தொடரைக் கைப்பற்றினாலோ இலங்கை அணிக்கு தரவரிசைப்பட்டியலில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், இது மட்டுமின்றி இத்தொடர் முடிந்தவுடன் இலங்கை அணிக்கு இரண்டு தொடர்கள் இருப்பதால், அதிலும் இலங்கை அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.


அத்தொடர்களிலும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால், இலங்கை அணி உலகக்கிண்ணம் தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவது கேள்வி குறி தான் என்று வெளியிட்டுள்ளது.