கூலிப்படையை ஏவி தந்தையை கொன்று நாடகமாடிய மகள்!!

356

தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே சொத்துக்காக பெற்ற மகளே கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வசித்து வந்தவர் மருத்துவர் ராஜப்பன். இவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கட்டிடத்தில் ராஜப்பன் மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 21ம் திகதி இரவு தனது வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்த மருத்துவர் ராஜப்பனை 2 இளைஞர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ராஜப்பனின் இளையமகள் தீபிகா மீது விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் நண்பரின் உதவியுடன் கூலிப்படைக்கு 4 லட்ச ரூபாய் கொடுத்து தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

சிறுவயது முதலே போலியோவால் பாதிக்கப்பட்ட தமக்கும் தனது தாய்க்கும், தந்தை எந்த வித உதவியும் வழங்காததால் வெறுப்பு ஏற்பட்டு கொலை செய்ததாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தீபிகா அவரது நண்பர் பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரை பொலிசார் கைது செய்தனர்.