வெள்ளை வானில் வந்தவர்கள் சாரதியை தாக்கி ஆறு லட்சம் ரூபா கொள்ளை!!

222

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கிவிட்டு ஆறு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபா கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தலவாக்கலை பசும் பால் நிலையத்திலிருந்து தனது பால் சேகரிப்பாளர் வீட்டுக்குபணத்தினை எடுத்து சென்று கொண்டிருந்த வேளையில், டொல்பின் ரக வெள்ளை வானில்வந்த சிலர் லொறிக்கு குறுக்காக வானினை நிறுத்தி தாங்கள் பினான்ஸ் கம்பனியிலிருந்து வந்துள்ளதாகவும், இந்த லொறிக்கு தவணை பணம் செலுத்தாததால் இந்த லொறியினை கொண்டு செல்ல வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து லொறி சாவியினை எடுத்தாகவும், பின் இவர் கொண்டு வந்த பணம் வைத்திருந்த பையினை எடுக்கும் போது கையை கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தியதாகவும், பின்தலையில் கட்டையொன்றினால் தாக்கி லொறியினையும் பணத்தினையும் எடுத்து சென்றதாகவும், அதன்பின் பாதிக்கப்பட்டவர் பொலிஸ் விசாரணையின் பின் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சாரதி ஆர்.சின்னையா தெரிவித்தார்.

லொறியினை எடுத்து சென்றவர்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை கொண்டு சென்று பணத்தினை மாத்திரம் எடுத்துக்கொண்டு லொறியினை வீதியோரத்தில் விட்டுச்சென்றுள்ளனர்.

கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்ட பணம் வட்டகொடை பசும் பால் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வெள்ளை வானில் வந்தவர்கள் அரச உத்தியோகத்தவர்கள் போல் உடை அணிந்திருந்ததாகவும் சுமார் ஐந்து பேர் வரை வானில் இருந்தாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது