வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதினோராம் நாளான நேற்று(05.04.2017) புதன்கிழமை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.
கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில் இராவணன் தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளேயாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன்.
அப்போது அந்த தேர்பாகன் அதை கண்டு பொறுக்காது இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான்.
இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசியுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான்.
இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து கைலாச வாகன காட்சி திருவிழா கொண்டாடப்படுகிறது .
வழமை போன்று மாலையில் அபிசேகங்கள் பூஜைகளின் நிறைவில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கைலாச வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த காட்சி கயிலைதரிசனத்தை பக்தர்கள் கண்டு ஆனந்தம் கொண்டனர்.