துபாயில் 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
ஐக்கிய எமிரேட்ஸில் பல்லினத்துவம் மற்றும் சகவாழ்வு குறித்த சாதகமான ெசய்தியை பரப்பும் நோக்குடன், துபாயிலுள்ள சீக்கியர்களின் ஆலயமான குருத்வாராவினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
101 நாடுகளைச் சேர்ந்த 600 இற்கும் அதிகமானோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்தியத் தூதுவர் நவ்தீக் சிங் சூரி, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி போர்ட் மௌரிங் மற்றும் பல நாடுகளின் ராஜதந்திரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர். இவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து உணவு உட்கொண்டனர்.
மிக அதிக எண்ணிக்கையான நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்ட நிகழ்வாக இது கின்னஸ் சாதனை நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களின் நடுவர் ஹோடா கச்சாப் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஒவ்வொருவரினதும் கடவுச்சீட்டை பரிசோதித்து அவர்களின் நாடுகளை உறுதிப்படுத்திக்கொண்டார்.
இதற்குமுன் 2015 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற மிலான் எக்ஸ்போ கண்காட்சியின்போது 55 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து உணவு உட்கொண்டமையே கின்னஸ் சாதனையாக இருந்தது எனவும் துபாய் நிகழ்வு இந்த எண்ணிக்கையை ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் நடுவர் ஹோடா கச்சாப் அறிவித்தார்.