மாணவியைக் காப்பாற்றிய நபர் : சீன ரயில் நிலையத்தில் வீர சாகசம்!!

464

சீனாவில், ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற மாணவியொருவரை, நபரொருவர் பாய்ந்து தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (10) சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் புட்டியான் ரயில் நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.

ரயில் நிலைய மேடையில் நின்றுகொண்டிருந்த பயணிகளுடன் பயணியாய் நின்றுகொண்டிருந்த குறித்த மாணவி, ரயில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தபோது ஓடிச் சென்று பாய எத்தனித்தார்.

ரயிலை நோக்கி மாணவி ஓடுவதைக் கண்ட ஒருவர், உடனடியாக நிலைமையைப் புரிந்துகொண்டு மாணவியின் பின்னால் பாய்ந்தோடிச் சென்றார். மாணவி தண்டவாளத்தில் பாய ஓரிரு நொடிகளே இருந்த நிலையில் அவரது சட்டையைப் பிடித்து இழுத்தபடி விழுந்தார் அந்நபர்.

மாணவியைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது தலை பலமாகத் தரையில் மோதியபோதும், அதைப் பற்றி சிந்திக்காமல் மாணவியை இழுத்து எடுத்துக் காப்பாற்றினார்.

இந்தக் காணொளிக் காட்சி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.