சிங்கப்பூர் சென்ற இலங்கை அகதிக்கு நேர்ந்த கதி!!

249

சிங்கப்பூரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதி திருச்சியில் 11 மணிநேரம் தவித்தார். பின்னர் அவர் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டார் என, தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த 26ம் திகதி இரவு 10.30க்கு வந்த விமானத்தில் பயணிகளின் ஆவணங்களை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற இலங்கையை சேர்ந்த பயணி அதே விமானத்தில் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கையை சேர்ந்த சுப்ரமணியம் மகன் ராணுகுமரன் (22), இலங்கை அகதியாக திருச்சியில் தங்கி தனியார் கல்லூரியில் பட்டம் பயின்றுள்ளார் என, தெரியவந்துள்ளது.

தற்போது மீள்குடியுரிமைப்படி இலங்கை செல்லும் அகதிகள் வரிசையில் ராணுகுமரன் மற்றும் அவரது பெற்றோர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருச்சி வழியாக இலங்கை சென்றுவிட்டனர்.

அங்கு ஓராண்டுகள் ஆன நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு வந்து செல்ல இந்திய தூதரகத்தை அணுகியுள்ளார்.
அனுமதி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் திருச்சி விமானநிலையம் வந்து நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். அங்கு ராணுகுமரனின் ஆவணங்களை சோதனை செய்த சிங்கப்பூர் அதிகாரிகள் சிங்கப்பூர் வருவதற்கான சிறப்பு விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லை என கூறி ராணுகுமரனை அவர் வந்த விமானத்திலேயே திருச்சிக்கு அனுப்பியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள், அவர் வந்த விமானத்தின் நிறுவனத்திடம் ராணுகுமரனை ஒப்படைத்தனர்.

இதனையடுத்து அந்த ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் ராணுகுமரனை இலங்கை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

11 மணி நேர தவிப்பிற்கு பிறகு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஶ்ரீ லங்கன் விமானம் மூலம் கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.