நாட்டில் நிலவும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கடலோர பகுதிகளில் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக நாட்டில் கனமழை பெய்துவரும் நிலையில் நாட்டின் 14 மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள அதே வேளையில் கேகாலை, காலி பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் இந்த மோசமான காலநிலை இந்த மாதம் இறுதி வரையில் நீடிக்கும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அவதான மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கடற் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதியில் காற்றின்வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். அதேபோல் தரையில் சுமார் 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் இருக்கலாம். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
அதேபோல் கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களனி கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கரையோர பகுதிகளில் உள்ள மக்களையும் உடனடியாக வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது