வவுனியாவில் இளைஞர் மீது தாக்குதல் : வாள்களுடன் நால்வர் கைது!!

230


வவுனியாவில் நேற்றையதினம் (29.05.2017) இரவு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பெயரில் 4பேர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.05.2017) மதுபோதையில் தாண்டிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது 15பேரடங்கிய குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



எனினும் பொலிசாரின் விசாரணைகள் பக்கசார்பாக இடம்பெறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (29.05.2017) இரவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வவுனியா பொலிசாரின் செயற்பாட்டில் நம்பிக்கையில்லை அவர்கள் தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை என்று தெரிவித்து பிறிதொரு முறைப்பாடு மேற்கொண்டனர்



இதையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தரவின் பெயரில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த இளைஞரைத் தாக்கியதாகத் தெரிவித்து 4 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதுடன் மேலும் ஒருவரை தேடிச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


அவர்கள் பயன்படுத்தும் குளாய்க்கிணறு தோண்டும் கனரக வாகனத்திலிருந்து புதிய வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரசணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்