கூலி வேலை செய்தவர் இன்று கோடீஸ்வர தொழிலதிபர் : சாதனைத் தமிழரின் கதை!!

879

 
எம்.ஜி.எம் நிறுவன குழுமம் இன்று உணவகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், மது வகை தயாரிப்பு, நிலக்கரி தொழில், தளவாடங்கள் ஆகிய துறைகளில் முன்னணியில் உள்ளது.

இதன் நிறுவனரின் பெயர் எம்.ஜி.முத்து. பள்ளிப் படிப்பையே முடிக்காத முத்து தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் கோடீஸ்வர தொழிலதிபராக இன்று வலம் வருகிறார்.

முத்து, தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கூலி வேலை செய்யும் தந்தைக்கு மகனாக பிறந்தார். வறுமையில் பிறந்து அதிலேயே வளர்ந்த முத்துவுக்கு தினமும் சாப்பிட உணவு கிடைப்பதே பெரிய விடயமாக இருந்தது.

வறுமை காரணமாக தனது பத்து வயது வரை பள்ளிக்கூடத்துக்கு போகாமல் இருந்த முத்து பின்னர் தனது கிராமத்தில் இருந்த சிறுவர்கள் பள்ளிக்கு போவதை பார்த்து சில நாட்கள் பள்ளிக்கு போனார்.

ஆனால், பசியால் துடித்த அவரால் பள்ளியில் உட்கார முடியவில்லை. இதையடுத்து சில நாட்களிலேயே பள்ளிக்கு போவதை முத்து நிறுத்தினார்.

அதன் பின்னர், தனது தந்தையுடன் துறைமுகத்தில் கூலி வேலைக்கு சென்றார். சில வருடங்கள் கடுமையாக அங்கு உழைத்த முத்து பின்னர் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து தான் சார்ந்திருக்கும் தளவாடங்கள் துறையில் சிறிய அளவிலான தொழிலை தொடங்கினார்.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்க்கையில் பல துன்பங்கள் ஏற்பட்ட போதும் அதை கண்டு துவண்டு போகாமல் முத்து உழைப்பால் சாதித்துள்ளார்.

மிக பெரிய தொழிலதிபர்கள் ஆளுமையாக திகழ்ந்த நேரத்தில் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலை தொடங்கிய முத்து தனது கடுமையான உழைப்பால் வாடிக்கையாளர்கள் குறை கூறாதவாறு தனது தொழிலை நடத்தி வந்தார்.

அதன் பிறகு வாடிக்கையாளர்கள் முத்துவை அதிகளவில் தேடி வர ஆரம்பிக்க அவர் தொழில் சூடு பிடிக்க தொடங்கியது. அந்த சமயத்தில் தான், தனது நிறுவனத்துக்கு எம்.ஜி.எம் குழுமம் என முத்து பெயரிட்டார்.

பின்னர் படிப்படியாக வளர்ந்து இன்று 2500 கோடிகள் மதிப்பிலான தொழில் சாம்ராஜ்யத்தை முத்து நடத்துகிறார்.

தளவாடங்கள் துறையில் தொடங்கிய எம்.ஜி.எம் குழுமம் இன்று எம்.ஜி.எம் விளையாட்டு பூங்கா, எம்.ஜி.எம் மது வகைகள், உணவகங்கள் போன்ற பல துறைகளில் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.

உலக புகழ்பெற்ற உணவகமான Marry brownன் இந்திய உரிமை முத்துவிடம் தான் தற்போது உள்ளது.