வவுனியாவில் இளைஞர்கள் குழுவினர் 6 பேருக்கு 10ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!!

618

வவுனியாவில் 6பேர் கொண்ட இளைஞர் குழுவினருக்கு நேற்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 10வருட கடூழிய சிறைத்தண்டனையும் தலா 10ஆயிரம் தண்டப்பணமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வவுனியா பூந்தோட்டம் பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியினை வழிமறித்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 6 இளைஞர்களை சோதனை மேற்கொண்டபோது வாள்கள், கத்திகள், பொல்லுகள் கைக்குண்டு என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைகள் இடம்பெற்றதையடுத்து பிணையில் செல்ல அனுமதிவழங்கப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

நேற்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது முச்சக்கரவண்டியில் அபாயகரமான ஆயுதங்களை தமது உடமையில் வைத்திருந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த 6 பேரடங்கிய இளைஞர் குழவினருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேருக்கே 10வருட கடூழியச்சிறைத்தண்டனையும் தலா 10ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்தமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார். தீர்ப்பு வழங்கியவுடன் எதிரிகளின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே அமர்ந்திருந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது பொலிசார் சென்று அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியிருந்தனர்.