நாட்டில் தற்போது டெங்கு நோய் பரவி வருவது அதிகரித்துள்ளதால், காய்ச்சல் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் எந்த சந்தர்ப்பத்திலும் வலி நிவாரணி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் பொதுக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் இணைப்பாளர் மருத்துவர் ஹசித திசேரா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் மருத்துவரிடம் சிகிச்சை பெறும் சந்தர்ப்பத்தில் நோயாளி வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுள்ளார என்பதை கேட்டறிய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் போது பெரசிட்டமோல் மருந்தை தவிர வேறு எதனையும் அருந்தக் கூடாது எனவும் உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர் திசேரா குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோய் ஏற்பட்ட ஒருவர் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டால் மரணம் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் குறிப்பாக இளம் வயதினர் இந்த ஆலோசனையை பின்பற்ற வேண்டும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெங்கு நோய் காரணமாக மரணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.