நீதியரசரே ஏன் நிரபராதிகளுக்கும் தண்டனை வழங்குகின்றீர்கள் : அமைச்சர் சத்தியலிங்கம்!!

360

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (17.06.2017) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரு அமைச்சர்கள் குற்றவாளிகள் எனவும் நானும் டெனிஸ்வரனும் நிரபராதிகள் எனவும் முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முதலமைச்சரினால் குற்றவாளிக்கும் நிரபராதிக்கும் வழங்கப்பட்ட தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது.

முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு அவருக்கு முழுமையான ஒரு அறிக்கையை வழங்கியுள்ளது.

ஏன் இந்த விசாரணைக் குழுவுடைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் அந்த விசாரணைக் குழுவினுடைய அறிக்கையை ஒரு பக்கத்திலே வைத்துவிட்டு அந்தக்குற்றம் செய்ததாக கூறப்படுகின்ற இரு அமைச்சர்களுக்கு தண்டனை வழங்குவதுபோல குற்றவாளிகள் இல்லை என்று இந்த விசாரணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கும் என்ன காரணம்? அப்படி ஒரு மாதகாலம் கட்டாய ஓய்வு ( தேவை ஏற்பட்டால் கட்டாய லீவை நான் மேலும் நீடிப்பேன்) என்ற ஒரு நிபந்தனையுடன் என்னுடைய அமைச்சினுடைய முழுப்பொறுப்பையும் செயலாளர் ஊடாக தான் நிர்வகிப்பேன் என்று ஏன் முதலமைச்சர் கூறினார்.

அவர் ஒரு நீதியரசர். எங்களை விசாரித்தவர்கள் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள். அந்த இரண்டு நீதிபதிகளுடைய அறிக்கை ஏற்காமல் இப்படி ஒரு மாறான முடிவை முதலமைச்சர் எடுப்பதற்கு யார் அவரை துண்டினார்கள் அல்லது யார் அவரை பிழையாக வழிநடத்தினார்கள் என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கின்றது. ஆகவே தான் அந்த அவையிலிருந்து நான் வெளிநடப்புச் செய்தேன்.

அதிலிருந்து தான் அனைத்துப் பிரச்சனைகளும் ஆரம்பித்தது. எனக்கு எதிராக கொண்டவரப்பட்ட அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்னை பழிவாங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டள்ளதாகவே கருதுகின்றேன்.

அதைவிட மேலே சென்று முதலமைச்சர் ஒருவிடயத்தைச் சொன்னார், மத்திய அமைச்சர்களுடன் நாங்கள் சென்று நெருக்கமான உறவைப்பேணுவதாகவும் ஒரு விடயத்தைச் சொன்னார். எங்களுடைய மாகாணசபை அமைப்பிலே 13ஆவது திருத்தச்சட்டத்தில் இருக்கின்ற சொற்ப அதிகாரங்களோடு 30 வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவையை வழங்குவதற்கு நிதிப்பலமோ? ஆள்பலமோ? வடமாகாணசபையில் இல்லை.

மத்திய அமைச்சின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் இருக்கின்ற ஒரு சபையே வடமாகாணசபை. இந்த மாகாண சபை மத்திய அரசாங்கத்தின் உறுதுணை இல்லாமல் சுயமாக எழுந்து நிற்கக்கூடிய ஒரு சபை அல்ல. இது ஒரு அரசாங்கம் அல்ல. அகவே தான் நாங்கள் மத்திய அரசாங்கத்தினுடைய சுகாதார அமைச்சரோடு நான் தொடர்புகளை ஏற்படுத்தி என்னுடைய தனிப்பட்ட தேவைகளைச் செய்யவில்லை. எமது மாகாண மக்களுக்குத் தேவையான வேலைத்திட்டங்களைக் கொண்டு வந்து செய்தேன்.

என் மீது முதலமைச்சரின் விசாரணைக் குழுவினால் ஐந்து  குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவைகள் அனைத்தும்  உண்மைக்கு புறம்பானவை என மேலும் தெரிவித்தார்.

முழுமையான செவ்வியை இங்கே காணுங்கள்..