டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக்கு இம்மாத இறுதியில் சிம்பாவே அணி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி இங்கு வரும் சிம்பாவே அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மோதவுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் காலி மற்றும் பல்லேகல ஆகிய மைதானங்களிலேயே நடைபெறவுள்ளன.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்ட இலங்கை அணி தற்போது நாடு திரும்பி தங்களின் வழக்கமான பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் சிம்பாவே அணியுடனான தொடரில் இலங்கை அணி தங்களை மெருகேற்றிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றது.
சிம்பாவே தொடர் முடிவடைந்ததும் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இந்திய அணி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.