ராட்சத வான்கோழி போன்றதொரு பறவை வாழ்ந்ததாகக் கண்டுபிடிப்பு!!

462

சாம்பல் நிற கங்காரு அளவிலான ‘பறக்கும் ராட்சத வான்கோழி’ போன்றதொரு பறவை முற்காலத்தில் இருந்ததாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, அழிந்து போய்விட்ட பறவையினங்களில் ஒன்றாகும்.

இலை குப்பைகளைக் கொண்டு நிலத்தில் மண்மேடுகளை உருவாக்கி, முட்டையிட்டு, புதைத்து வைப்பதற்கு பேர்போன நவீன கால மல்லீ ஃபவுல் (Mallee Fowl) பறவையின் முற்கால பறவை உறவினம் தான் இந்த சாம்பல் நிற கங்காரு அளவிலான ‘பறக்கும் ராட்சத வான்கோழி’

இருப்பினும், இந்த ‘பறக்கும் ராட்சத வான்கோழியான’, ப்ராகுரா காலினாசியாவிற்கு, மல்லீ ஃபவுல் பறவை பெற்றிருக்கும் பெரிய பாதங்களோ, தனி சிறப்பு மிக்க கூர்நகங்களோ இல்லை என `ராயல் சொசைட்டி` சஞ்சிகையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாறாக, இந்தோனேஷியாவிலும் பசுபிக்கிலும் வாழும், இன்றும் மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் சில பறவையினங்களைப் போல, ப்ராகுரா காலினாசியா வெப்பமான மணல் அல்லது மண்ணில் தங்கள் முட்டைகளைப் புதைத்து வைத்துள்ளன.

அடிலெய்டிலுள்ள ஃபிளின்டஸ் பல்கலைக்கழகத்தின் குழு ஒன்று புதிய மற்றும் புதை படிவ எச்சங்களை ஆய்வு செய்திருக்கிறது.

இவற்றில் சில மாதிரிகள் முதன்முதலில் 1800களில் சேகரிக்கப்பட்டவை. புதிய மாதிரிகள் அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள புகழ்பெற்ற தைலாகோலியோ காவெர்ன்ஸில் இருந்து கிடைத்தவை. இங்குதான் சுண்ணாம்புக் குழாய்களால் எண்ணற்ற முற்கால விலங்குகள் அழிந்ததாகக் கருதப்படுகிறது.

மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் அழிந்துவிட்ட பறவையினங்களில் ப்ராகுரா காலினாசியா மிகவும் பெரியதாகும்.

11,700 ஆண்டுகள் முதல் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான பிளாய்ஸ்டோசீன் காலத்தில் இந்த பறவையினங்கள் எல்லாம் வாழ்ந்துள்ளன.

அழிந்துபோன பல பெரிய பறவைகளில் டோடோ போன்றவை பறக்க முடியாதவையாக இருந்தாலும், ப்ராகுரா காலினாசியா நிச்சயமாகப் பறந்திருக்க முடியும் என ஃபிளின்டஸ் பல்கலைக்கழக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வலுவான இறகு எலும்புகளைக் கொண்ட இது, மரங்களில் தங்கியதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் முற்கால பறவையினங்கள் பற்றிய இந்த ஆய்வு “ஒபன் சைன்ஸ்” பத்திரிகையில் வெளியாகியுள்ளது.