50 வது பிறந்தநாள் கொண்டாடிய உலகின் முதல் ATM!!

442

 
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் ATM இயந்திரங்கள் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டன.

வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று நேரத்தைப் போக்க இன்று யாரும் தயாராக இல்லை, தேவைப்படும்போது ATM இல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பதால் பலரும் வங்கிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இந்த ATM இயந்திரங்கள் யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என தெரியுமா?

வடக்கு லண்டனில் அமைந்துள்ள பார்க்லேஸ் வங்கியின் என்பீல்ட் கிளை சார்பில் முதல் முதலாக ATM இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை அப்போதைய தொலைக்காட்சி நடிகர் ரெஜ் வார்னி தொடங்கி வைத்து பணம் எடுத்தார்.

அந்த ATM இயந்திரத்தின் 50 ஆம் ஆண்டு விழா நேற்று முன்தினம் (27) கொண்டாடப்பட்டது.

ATM இயந்திரத்தை வடிவமைத்தவர் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஷெப்பர்ட்பேரென், இவர் வடிவமைத்த ATM இயந்திரம் தான் 1967 ஆம் ஆண்டில் ஜூன் 27 ஆம் திகதி அன்று வடக்கு லண்டனில் திறக்கப்பட்டது.

முதலில் ஆறு இலக்க குறியீட்டை இட்டனர், அதன்பின், ஆறு இலக்கம் என்பது நான்காக குறைக்கப்பட்டது.

இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் ATM இயந்திரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, முதன் முதலாக அமைக்கப்பட்ட லண்டனில் இன்று சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட ATM இயந்திரகள் உள்ளன.

இன்றைய தினத்தை நினைவுபடுத்தும் விதமாக பார்க்லேஸ் வங்கி தனது முதல் ATM அமைந்திருந்த என்பீல்ட் கிளையை தங்கத் தகடுகளால் சிறப்பாக அலங்காரம் செய்திருந்தது.

மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிவப்புக் கம்பளம் விரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.