இஸ்லாமிய இளைஞரை காதலித்த மகளை கொலை செய்த கிறித்துவ தந்தை!!

346

இஸ்ரேல் நாட்டில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த காரணத்திற்காக பெற்ற மகளை கிறித்துவ மதத்தை சேர்ந்த தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள ராம்லே நகரில் Henriette(17) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

கிறித்துவ மதத்தில் அதிகளவில் ஈடுபாடு கொண்ட பெற்றோர் தங்களது மகளை கட்டுப்பாட்டுடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களுடைய மகள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதை பெற்றோர் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே சமயம், சிறிய குற்றம் காரணமாக இஸ்லாமிய வாலிபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தகவலும் பெற்றோருக்கு கிடைத்துள்ளது.

‘குடும்பத்தை சீரழிக்கும் வகையில் அந்த வாலிபருடன் இனிமேல் பழக வேண்டாம்’ என தந்தை மகளுக்கு பலமுறை அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால், தந்தையின் வார்த்தைகளை ஏற்காத மகள் சிறையில் இருக்கும் தனது காதலனுடன் தொடர்பு வைத்திருந்தது மட்டுமில்லாமல் அவருக்கு தேவையான உதவிகளையும் இளம்பெண் வெளியில் இருந்து செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ‘எனது காதலன் அடுத்த வாரம் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். நான் கிறித்துவ மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறப்போகிறேன்’ என இளம்பெண் மற்றொரு தோழியுடன் கூறியுள்ளார். இந்த தகவல் தந்தைக்கு கிடைத்தவுடன் அவர் கடுங்கோபம் கொண்டுள்ளார்.

கடந்த ஜூன் 13-ம் திகதி மகள் வீட்டிற்கு வந்தவுடன் அவருடன் வாக்குவாதத்தில் தந்தை ஈடுபட்டுள்ளார். ஆனால், இஸ்லாமிய வாலிபரை திருமணம் செய்துக்கொள்வதில் எவ்வித மாற்றமும் இல்லை என மகள் கூறியுள்ளார்.

மகளின் வார்த்தைகளை கேட்டு ஆத்திரம் அடைந்த தந்தை சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தில் பல இடங்களில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மகள் துடிதுடித்து உயிரிழந்தார். தந்தையை கைது செய்துள்ள பொலிசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.