இலங்கைக்கு வர விரும்பும் ஒருசில வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வீசா மறுக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், எந்த நாட்டவருக்கும் அவ்வாறு வீசா மறுக்கப்படவில்லை என்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சிரியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இங்கு வருபவர்களின் வீசா விண்ணப்பங்கள் விசேட பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வீசா வழங்கப்படுவதாக வெளிவந்திருக்கும் வதந்திகளில் உண்மை இல்லை.
எந்த நாட்டவரும் இலங்கை வீசாவுக்கு விண்ணப்பம் செய்தால் அவர்களுக்கு 30 நாட்களுக்கான வீசா வழங்கப்படும். 30 நாட்கள் முடிந்த பின் அவர்கள் தொடர்ந்து இங்கு தங்கவேண்டி வந்தால் வீசாவை நீடித்துக்கொள்ளலாம்.
சுற்றுலா, கல்வி, வைத்திய சிகிச்சை, வியாபாரம், ஆராய்ச்சி போன்ற எந்தத் தேவைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கும் வீசா வழங்குவதற்கு தடை கிடையாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.