லண்டன், ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 4ஆம் திகதிமுதல் 13ஆம் திகதிவரை நடைபெறவுள்ளகளில் இலங்கையிலிருந்து இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமாக நான்கு மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர்.
மரதன் ஓட்ட வீரர் அநுராத இந்த்ரஜித் குரே, ஈட்டி எறிதல் வீரர் வருண லக் ஷான் தயாரட்ன, மரதன் ஓட்ட வீராங்கனை ஹிருணி விஜேரத்ன, 800 மீற்றர் ஓட்ட வீராங்கனை நிமாலி லியனஆராச்சி ஆகிய நால்வரே இலங்கை சார்பாக இம்முறை பங்குபற்றவுள்ளனர்.
உலக மெய்வல்லுநர் அரங்கில் சுசன்திகா ஜயசிங்கவுக்குப் பின்னர் இலங்கையர் எவருமே பதக்கம் வென்றிராத நிலையில் இம்முறை லண்டனில் இலங்கைக்கு பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.
ஏதென்ஸ் 1997 உலக மெய்வல்லுநர் போட்டி, ஒசாகா 2007 உலக மெய்வல்லுநர் போட்டி ஆகியவற்றில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் சுசன்திகா ஜயசிங்க முறையே வெண்கலம், வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார். அத்துடன் சிட்னி 2000 ஒலிம்பிக் விளையாட்டு விழா 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
எனினும் லண்டன் உலக மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு பதக்கம் கிடைப்பதென்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று என இலங்கை மெய்வல்லுநர் சங்கத செயலாளர் பிரேமா பின்னவெல தெரிவித்தார். எனினும் இப் போட்டிகளில் இலங்கையரின் நேரப் பெறுதிகள் மற்றும் தூரப் பெறுதிகளில் முன்னேற்றத்தை எதிர்பாரப்பதாக அவர் கூறினார்.
அநுராத இந்திரஜித் குறே (39 வயது) லண்டனில் இருந்தவாறு இப் போட்டியில் பங்குபற்றும் அதேவேளை ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்துவரும் ஹிருணி விஜேரத்ன (27 வயது) அங்கிருந்து லண்டன் செல்கின்றார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் இயூஜினில் நடைபெற்ற மரதன் ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் சம்பியனாகியிருந்தார்.
இங்கிருந்து நிமாலி (27 வயது), வருண ஆகியோர் பயிற்றுநருடன் இன்று இரவு லண்டன் நோக்கி புறப்படுகின்றனர்.
இவர்களுடன் இலங்கை மெய்வல்லுநர் சங்கத் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ, செயலாளர் பிரேமா பின்னவெல, நிமாலியின் பயிற்றுநர் சுஜித் அபேசேகர ஆகியோரும் லண்டன் செல்லவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதேவேளை, ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றெடுத்த ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட் உட்பட உலகின் நட்சத்திர மெய்வல்லுநர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் ஒலிம்பிக் அரங்கிலிருந்து விடைபெற்ற யூசெய்ன் போல்ட், சர்வதேச அரங்கில் பங்குபற்றவிருக்கும் கடைசி நிகழ்ச்சி இதுவாகும்.