உறங்கினால் மரணம் : வினோதமான நோயால் அவதிப்படும் இளைஞன்!!

337

 
பிரித்தானியாவில் உறங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Gosport நகரில் வசித்து வரும் Liam Derbyshire(17) என்ற இளைஞரை தான் இந்த வினோதமான நோய் தாக்கியுள்ளது. இவ் இளைஞன் பிறந்த நாள் முதல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பெரும் சித்ரவதையை அனுபவித்து வருகிறார்.

குறிப்பாக, Central Hypoventilation Syndrome என்னும் விசித்திரமான நோய் இவ் இளைஞரை தாக்கியுள்ளது. உலக மக்கள் தொகையில் 1,500 நபர்களை மட்டுமே தாக்கும் இந்த அரிதான நோயின் தன்மையால் இளைஞனின் பெற்றோர் ஒவ்வொரு நாளும் நரகத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நோய் தாக்கியுள்ள நபர் உறங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலுமாக நின்றுவிடும் அபாயம் உள்ளது.
இதுமட்டுமில்லாமல், இதயத்துடிப்பின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதுடன் இரத்தக்கொதிப்பும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இளைஞரை பரிசோதனை செய்து வரும் மருத்துவர் இது குறித்து தெரிவிக்கும்போது, இளைஞனின் எதிர்காலம் நிச்சயத்தன்மை இல்லாதது. ஒவ்வொரு முறை இவர் படுக்கைக்கு செல்லும்போது ‘உயிரை பாதுகாக்க உதவும் கருவிகளை’ பொருத்திய பின்னர் தான் தூங்க முடியும்.

இச்சாதனங்கள் பொருத்தாமல் தூங்கினால், அதுவே கடைசி தூக்கமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.