வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிசார் குவிப்பு!!

535

 
வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (15.08.2017) காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார்.

எனவே இவ்விடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்கக்கோரி அக்கிராம மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரத்தினை இன்று காலை 8.30 மணியளவில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட இடத்திற்கு விரைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்கள்.

இப் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தற்காலிகமாக மூவரை மாதந்தம் 7500 ரூபா சம்பளம் அடிப்படையில் நியமிப்பதாகவும் உங்கள் கிராமத்திலிருந்து மூவரை தருமாறு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த தெரிவித்தார். அதனையடுத்து பொதுமக்கள் புகையிரத்திற்கு முன்னாள் நின்று அகன்று புகையிரதம் செல்வதற்கு வழிவிட்டனர்.

​இதனால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புகையிரம் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.​

​விரைவில் இவ்விடத்திற்கு பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்காவிட்டால் போராட்டம் தொடருமென பொதுமக்கள் தெரிவித்தனர்.​