விடியவிடிய கொட்டும் மழையில் மகனின் சடலத்துடன் நின்ற தாய்!!

336

டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை வீட்டுக்குள் வைக்க அனுமதிக்காத வீட்டு உரிமையாளர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரம்மா, இவருக்கு சுரேஷ் (10) மற்றும் இன்னொரு மகன் உள்ளனர்.

ஈஸ்வரம்மா அங்குள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளான்.

மகனின் சடலத்தை ஈஸ்வரம்மா வீட்டுக்கு கொண்டு வந்த நிலையில், வீட்டு உரிமையாளர் ஜகதீஷ் சடலத்தை வீட்டு உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

ஜகதீஷ் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ள நிலையில், அபசகுணம் காரணமாக இதை அவர் செய்துள்ளார். இதையடுத்து இரவு முழுவதும், சுரேஷ் சடலத்துடன் ஈஸ்வரம்மா மற்றும் அவரின் இளைய மகன் சாலையில் நின்றுள்ளனர்.

அப்போது மழை வேறு பெய்துள்ளது, இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கண்ணாடி சவப்பெட்டியை வரவழைத்து அதில் சடலத்தை வைக்க உதவியதோடு, இறுதி சடங்குக்கு தங்களால் முயன்ற பணத்தை கொடுத்துள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் இரக்கமற்ற செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.