மகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

743

மகளுக்கு விஷ ஊசி செலுத்தி அவர் உயிரிழந்த நிலையில், தாயும் விஷ ஊசி செலுத்தி கொண்டு உயிரை விட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி நகரை சேர்ந்தவர் ராம்பால் சிங், இவர் மனைவி பரம்ஜித் கவுர் (38), இவர்களுக்கு சுக்மந்தீப் கவுர் (12) என்ற மகள் உள்ளார்.

பரம்ஜித் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமையன்று கணவரை சில பொருட்கள் வாங்கி வருமாறு மார்க்கெட்டுக்கு பரம்ஜித் அனுப்பியுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த விஷ ஊசியை எடுத்து மகளுக்கு செலுத்தி விட்டு தன்னுடைய உடலிலும் பரம்ஜித் செலுத்தி கொண்டுள்ளார்.

அப்போது அவர் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் தாயும், மகளும் தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து ராம்பால் சிங்குக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வந்து மனைவி, மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதுகுறித்து பொலிசார் விசாரிக்கையில், பரம்ஜித் எழுதிய இரண்டு கடிதங்கள் அவர் வீட்டில் சிக்கியது. அதில், எங்கள் மரணத்துக்கு யாரும் காரணமில்லை, வீட்டு சூழ்நிலையால் நான் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளேன் என எழுதப்பட்டிருந்தது.

வீட்டில் அடிக்கடி நடக்கும் தகராறு காரணமாக பரம்ஜித் மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் உறவினர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த கடிதங்கள் உண்மையிலேயே பரம்ஜித் கையால் எழுதப்பட்டது தானா என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.