கரட் என நினைத்து காரைக் கடித்த கழுதை : உரிமையாளர் மீது வழக்குத் தாக்கல்!!

341

உணவுப்பொருள் என நினைத்து புல்வெளிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்போர்ட்ஸ் காரை கடித்த கழுதை ஒன்றால் , காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு கழுதையின் உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டுமா என்பது குறித்து ஜெர்மனி நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதியன்று, மார்கஸ் ஜான் என்பவர் ஹெஸி மாநிலத்தில் உள்ள வோகல்ஸ்பர்க் மாவட்டத்தில் புல்வெளியொன்றில் தனது ஒரஞ்ச் நிற மெக்லாரென் ஸ்பைடர் காரை நிறுத்தியிருந்தார்.

தனது காரின் பின்பகுதியை விட்டஸ் என்ற கழுதை கடித்துவிட்டதாக மார்கஸ் முறைப்பாடு பதிவு செய்தார்.

கரட் என நினைத்து விட்டஸ் காரை கடித்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் தனது கழுதையால் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு 6000 பவுண்ட்கள் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு அதன் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புல்வெளிக்கு அருகே 3 இலட்சம் பவுண்ட்கள் மதிப்பிருக்கலாம் என்று கூறப்பட்ட காரை அதன் உரிமையாளர் நிறுத்தியிருக்கக்கூடாது என்றும், அதனால் தனது கழுதை குற்றவாளி அல்ல என்றும் கழுதையின் உரிமையாளர் வாதிடுகின்றார்.

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வௌியாகவுள்ளது.